உயர்தரப்பரீட்சை தமிழ் மொழி வினாத்தாள்களில் பாரிய பிழைகள்-சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்!(வீடியோ)
நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் உயிரியல் வினாத்தாள் பகுதி - 01 இல் தமிழ்மொழியில் பாரிய பிழைகளை அவதானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்த பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மொழி மாணவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இத் தவறுகள் காரணமாக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் சந்தர்ப்பத்தைப் பல மாணவர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்விடயத்தில் கல்வி அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும்.
"உயிரியல் வினாத்தாள் பகுதி - 01 இல் பல தவறுகள் காணப்படுகின்றன. 01. 02 ஆவது வினாவில் பிரதானமாக என்பதற்குப் பதிலாக முக்கியமாக எனவும், 02. 05 ஆவது வினாவில் விளைத் திறனானது என்பதற்குப் பதிலாக வினைத்திறனானது எனவும், 03. 07 ஆவது வினாவில் அ. பெறப்பட்ட என்பதற்குப் பதிலாக பெற்ற எனவும் ஆ. கடத்தப்படுகின்றன என்பதற்குப் பதிலாக ஊடுகடத்தப்படுகின்றன எனவும், இ. மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதற்குப் பதிலாக மாற்றம் ஏற்படுகின்றது எனவும்,
04. 9ஆவது வினாவில் கொம்புருத் தாவரங்கள் என்பதற்குப் பதிலாக கொம்புத் தாவரங்கள் எனவும், 05. 12 ஆவது வினாவில் முதிர்ச்சியின்போது என்பதற்குப் பதிலாக முதிர்ச்சிப் பருவத்தில் எனவும், 06. 13 ஆவது வினாவிலும் 39 ஆவது வினாவிலும் வினைத்திறனாக என்பதற்குப் பதிலாக திறமையாக எனவும், 07. 13 ஆவது வினாவில் திசைகோட் சேர்க்கை என்பதற்குப் பதிலாக திசைமுகப்படுத்தல் எனவும், 08 16 ஆவது வினாவில் ஒளித்தொகுப்புச் செய்யும் என்பதற்குப் பதிலாக ஒளித்தொகுப்பி எனவும் தவறாக இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று 09. 17 ஆவது வினாவில் விடுவிக்கத் தூண்டப்படும் என்பதற்குப் பதிலாக தூண்டப்படும் எனவும், 10. 18 ஆவது வினாவில் அமைவிடம் என்பதற்கு பதிலாக இருக்கும் இடம் எனவும், 11. 21 ஆவது வினாவிலும் 44 ஆவது வினாவிலும் சமிக்ஞை என்பதற்குப் பதிலாக சைகை எனவும் கொடுக்கப்பட்டிருந்தன.
12. 22 ஆவது வினாவில் இயற்கையாகக் கொல்லும் என்பதற்குப் பதிலாக இயற்கைக் கொல்லும் எனவும், 13. 24 ஆவது வினாவில் பார்வைப் புலன் பரப்பு என்பதற்குப் பதிலாக கட்புலப் புலன் பரப்பு எனவும், 14. 31 ஆவது வினாவில் தேவையானவையாகும் என்பதற்குப் பதிலாக போதியனவாகும் எனவும், 15. 40 ஆவது வினாவில் படுக்கை என்பதற்குப் பதிலாக படுகை எனவும் வந்துள்ளது.
16. 44 ஆவது வினாவில் சுரப்பிகளை என்பதற்குப் பதிலாக சுரப்பிகளையும் எனவும், 17. 47 ஆவது வினாவில தலைகீழாகக் காணப்படலாம் என்பது தலைகீழாக்கப்படலாம் எனவும், 18. 48 ஆவது வினாவில் தத்திகளினுள்ளும் தாவரங்களினுள்ளும் என்பது தத்திகளிலும் தாவரங்களிலும் எனவும் தரப்பட்டுள்ளன. வினா 20 இல் ஆங்கில, சிங்கள மொழி மூலங்களில் பயன்படுத்தப்பட்ட சோணையறை என்ற சொல்லுக்குப் பதிலாக சோணையறை கூடம் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது போன்றே இன்னும் பல பிழையான சொற்கள் மலிந்து காணப்படுகின்றன.
இம்மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற உயிரியல் வினாத்தாள் பகுதி - 01 இல் தமிழ்
மொழியில் விடப்பட்டுள்ள இவ்வாறான பல தவறுகள் காரணமாக பல்கலைக்கழகத்துக்குத்
தெரிவாகும் சந்தர்ப்பத்தை பல மாணவர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால்
இவ்விடயத்தில் கல்வி அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



