2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளின் படி 30,898 பரீட்சார்த்திகள் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்
அதன்படி, இந்த குழுவில் 19,301 பாடசாலை மாணவர்களும், 11,597 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.
இந்த பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.
பல்கலைக்கழக அனுமதி
இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், http://onlineexams.gov.lk/onlineapps எனும் இணையத்தளத்தினூடாக 06.04.2026 தொடக்கம் 22.04.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் (Online) மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் அச்சிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்று அட்டவணைகள், மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னரே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.