சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் (10.08.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் இந்தப் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நாடு முழுவதும் 2532 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் என மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சைக்கு தயாராக வேண்டிய சவால்களுக்கு மேலதிகமாக, தற்போது நிலவும் சீரற்ற காலநிலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிவு, வீதிகளில் சேறும் சகதியும் மற்றும் பாறைகள் சரிந்து விழும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
குறிப்பாக ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளிலும், தோட்டப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் பல உள்வீதிகளிலும் மழையின் தாக்கம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தொலைதூர தோட்டப்புறங்களில் இருந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் அதிகாலை நேரத்திலேயே தங்களது பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மலைப்பாங்கான பகுதிகளில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக காலை நேரங்களில் வாகனங்களின் பார்வைத்திறன் குறைவடைவதுடன், வீதிகள் வழுக்கும் தன்மையையும் கொண்டுள்ளன.
இதன் காரணமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சவால் நிலைமை
குறிப்பாக தோட்டப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களை அடைவதற்கு பொதுப் போக்குவரத்து சேவைகளையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளதால், மழை மற்றும் வீதி நிலைமைகளால் ஏற்படக்கூடிய தாமதம் அவர்களுக்கு மேலதிக சவாலாக அமையக்கூடும்.

எனவே, மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்தை கருத்தில் கொண்டு, வழக்கத்தை விட முன்னதாகவே தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு பரீட்சை நிலையங்களை சென்றடைவது பாதுகாப்பானதாகும்.
பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நுவரெலியா மாவட்டத்தின் அபாயம் காணப்படும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக மண்சரிவு அபாயம் காணப்படும் தோட்டப்புறங்கள், மலைச்சரிவுகள் மற்றும் மழையினால் பாதிக்கப்படும் வீதிகளில் பரீட்சைக் காலப்பகுதியில் விசேட கண்காணிப்பும், தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்