எரிபொருள் நிரப்பும் நிலையம் உரிய முறையில் செயற்படுவதில்லை: மக்கள் விசனம் (Photos)
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, சிறுத்தோப்பு பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் தொடர்ச்சியாக உரிய நேரத்தில் திறக்கப்படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் கிராமத்திலிருந்து பேசாலை வரையிலான குறித்த பிரதான வீதியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் மாத்திரம் அமைந்துள்ளது.
குறித்த எரி பொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த சில வருடங்களாக எரிபொருட்கள் போதிய அளவு கையிருப்பில் இருப்பது இல்லை எனவும், அதனைத் தொடர்ந்து உரிய நேரத்தில் திறக்கப்படுவது இல்லை எனவும் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பேசாலை மற்றும் அதனை அண்டிய பல பகுதியில் உள்ள அரச தனியார் பணியாளர்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அசமந்த போக்கு காரணமாக பெரும் சிரமங்களைத் தொடர்ச்சியாக எதிர் கொண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் உள்ளவர்கள் மீன் பிடி தொழிலை அதிகம் மேற்கொண்டு வரும் நிலையில், மீன் பிடி தொழிலுக்குத் தேவையான மண்ணெண்ணெய்யை உரிய முறையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த நில நாட்களாக உரிய நேரத்தில் குறித்த எரிபொருள் விற்பனை நிலையம் திறக்கப்படுவதில்லை. இன்றும் (24) காலை சுமார் 7.50 மணி அளவில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்பட்ட போது அங்கு எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தவர்கள் தாமதம் குறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்தசமயம்
தாமதம் குறித்து வினாவிய ஒரு பெண்ணிடம் அங்கு கடமையாற்றுபவர் அநாகரிக வார்த்தையைப்
பாவித்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம்
தெரிவித்துள்ளதோடு, இவ்விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.