வீட்டுக்குள் புகுந்த கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ வைப்பு! - யாழ். நவாலியில் அடாவடி
யாழ்., நவாலி, அரசடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றுக்குத் தீ மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அந்தக் கும்பலைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து நடத்துபவர் எனப் பொலிஸாரின் அடையாளப்படுத்துபவரின் வீட்டுக்குள் புகுந்தே முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து கும்பல் தப்பிச் சென்ற நிலையில் அந்தப் பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்றுள்ளனர். அதனால் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
அந்த மோட்டார் சைக்கிள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



