கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று ஸ்கைப் தொழிநுட்பத்தின் மூலம் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சாட்சியங்களை முன்வைத்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள்
இந்த சம்பவத்தில் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததற்கான உண்மைகள் தெரியவந்துள்ளதாக, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் சாட்சியங்களை முன்வைத்தனர்.
மூன்றாவது சந்தேகநபரின் தொலைபேசியில் இரண்டு துப்பாக்கிகளின் புகைப்படங்கள் இருந்ததாகவும், அவற்றை அவர் நீக்கிவிட்டதாகவும், பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த புகைப்படங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
புகைப்படங்களில் உள்ள துப்பாக்கிகளில் ஒன்று துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், மற்ற துப்பாக்கி குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 55 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 25 ஆதாரங்கள் அரசு நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமையால், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |