செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட பெண் சட்டத்தரணி: நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை 90 நாட்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்ய தடுப்புக்காவல் உத்தரவைப் பெற எதிர்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (31) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் முன்னிலையான விசாரணை அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி குறித்த அறிக்கையை கொழும்பு தலைமை நீதவானிடம் சிஐடி சமர்ப்பித்துள்ளது.
இதன்போது சட்டத்தரணியை 90 நாட்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்ய தடுப்புக்காவல் உத்தரவை வழங்குமாறு கோரியுள்ளது.

தடுப்புக்காவல் உத்தரவு
தற்போது தடுப்புக்காவல் உத்தரவில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான விசாரணை அதிகாரி, கணேமுல்லவின் கொலைக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் சந்தேகநபர், கெஹல்பத்தர பத்மேவின் வழக்குகளுக்கு தேவையான சட்ட உதவியை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் துறை, "குறித்த சந்தேகநபர் கெஹல்பத்தர பத்மேவின் வழக்குகளில் முன்பு முன்னிலையாகியிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே சந்தேகநபருக்கு லட்சக்கணக்கான பணத்தினை வழங்கியிருக்கிறாரா என்பதை அறிய அவரது வங்கிக் கணக்குகளிலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சம்பவம் தொடர்பாக மேலும் சாட்சியங்களை வழங்கிய விசாரணை அதிகாரி, "இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வங்கிக்கணக்கு விசாரணை
இவர்களில் முக்கிய சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலங்களின்படி, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக வழக்கறிஞர்களின் வாகனத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர், தண்டனைச் சட்டம் அடங்கிய இரண்டு சட்டப் புத்தகங்கள் போன்றவற்றை சந்தேகநபர் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முதல் சந்தேகநபரான துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு நீதிமன்றத்திற்குள் நுழையத் தேவையான அடையாள அட்டையைத் தயாரிக்க குறித்த சட்டத்தரணியினால் அடையாள அட்டை வழங்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஏழு வங்கிக் கணக்கு பதிவுகளைப் பெற உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் துறை இன்று நீதிமன்றத்தை கோரியது.
சம்பவம் தொடர்பான உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நவம்பர் 7 ஆம் திகதி அறிவிக்க உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri