கொடுப்பனவை மீளப்பெறாமல் மக்களிடமே வழங்குங்கள் - பிரதேச சபை உறுப்பினர்
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவைச் சேமிப்பில் வைக்குமாறு கோராமல் உடனடி பயன்பாட்டிற்கு வழங்குமாறு பிரதேச சபை உறுப்பினர் துஸ்யந்தன் விக்டர்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை சமுர்த்தி சேமிப்பில் இடுமாறு பயனாளர்களிற்கு அறிவுறுத்தப்படுகின்றது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட சிலகுடும்பங்களிற்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை சமுர்த்தி சேமிப்பில் வைப்பிலிடுமாறு சில கிராமங்களில் அறிவுறுத்தப்படுகின்றமை, ஏற்க முடியாத செயல்.
குறிப்பாக கோவிட்-19 தொற்றால் தொழிலின்றி பாதிக்கப்படும் குடும்பங்கள், மற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பல குடும்பங்களிற்கு இந்த கொடுப்பனவு பயனுடையதாக இருந்துள்ளது.
இந்நிலையில் வவுனியாவின் சில கிராமப்பகுதிகளில் குறித்த தொகையினை சமுர்த்தி சேமிப்பில் வைப்பிலிடுமாறு உத்தியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை வழங்கியிருந்தனர். மக்களின் உடனடி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட அந்த நிதியினை சேமிப்பில் வைப்பிலிடுமாறு கோருவது முறையற்ற செயல்.
எனவே இது தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதுடன் அந்த பணத்தினை பொதுமக்களின் உடனடி பயன்பாட்டிற்கு வழங்குமாறு கேட்டுள்ளேன். அவர் அதனை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.