எரிபொருள் தட்டுப்பாடு - பாதிப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள்
உலகளாவிய ரீதியில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது, குறிப்பாக வடமாகாணத்தில் கரையோரங்களை அண்டிய மாவட்டங்களில் கடற்தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (23.03.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் முகங்கொடுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாகவும், சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற போர் நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு, அதை கையாளுகின்ற வகையிலே அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை நாங்கள் சற்று ஆராய வேண்டியிருக்கின்றது. குறிப்பாக உலகளாவிய ரீதியில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
முகங்கொடுத்த விடயங்கள்
அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால், கரையோரங்களை அண்டிய மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்கள் நேரடியாக கடற்தொழிலாளர்களை கொண்ட வாழ்வாதாரத்தின் ஊடாக இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலத்தில் பல விஷயங்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம்.
பொருளாதார நெருக்கடி, நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி, அதற்கு அப்பால் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய வருகையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும், அதற்கப்பால் 'டிட்வா' புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்று தொடர்ச்சியாக கடற்தொழிலாளர்கள் முகங்கொடுத்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகளோடு, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு, அதற்கப்பால் இனி வருங்காலங்களில் ஏற்படப்போகின்ற பொருட்களுக்கான விலையேற்றங்கள் அல்லது அதற்கான கட்டுப்பாடுகளை எவ்வாறு இந்த மக்கள், வடபகுதியில் வாழுகின்ற மக்கள் எவ்வாறு முகங்கொடுக்க போகிறார்கள் என்ற அச்ச நிலை ஏற்பட்டிருக்கிறது.
நாங்கள் கடற்தொழிலாளர்கள் மத்தியிலே இருக்கின்ற அச்ச நிலையை கருத்தில் கொண்டால், தற்போது மன்னார் மாவட்டத்திலும் சரி, வட மாகாணத்திலும் சரி, மண்ணெண்ணெய் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு அரசு நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலே பகிர்ந்தளிக்க கூடிய நடைமுறையாக QR என்ற நடைமுறையை பயன்படுத்துகின்றது.
நெருக்கடி நிலை
மன்னார் மாவட்டத்தில் கிட்டத் தட்ட மன்னாரில் 3,500 பிளாஸ்டிக் படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்களும் இருக்கின்றன. அதற்கப்பால் ஒரு நாள் படகுகளாக 250 படகுகள் டீசலைப் பயன்படுத்துகின்ற படகுகள் காணப்படுகின்றன. இதற்கான எரிபொருளை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்த போதிலும், தற்போது வரை இந்த கடற்தொழிலாளர்களுக்கு அவ்வாறான நெருக்கடி நிலை பெரிதாக ஏற்படவில்லை.

இருந்தபோதிலும் இப்போது இருக்கின்ற நிலையிலே ஒரு படகுக்கான எரிபொருள் தேவையாக நாள் ஒன்றுக்கு 30 தொடக்கம் 40 லிட்டர் வரையிலான மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. அரை லீட்டர் உட்பட ஒரு லீட்டர் பெட்ரோல் வரை தேவை ஏற்படுகிறது. தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் 25 லீட்டரும், பெட்ரோல் அரை லீட்டரும் நாள் ஒன்றுக்கான கடற்தொழிலாளருக்கான பங்கீடாக வழங்கப்பட்ட போதிலும், அந்த எரிபொருள் கூட சில நேரங்களில் கடற்தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறோம். எதிர்வரும் காலங்களிலே அண்மையிலே நாங்கள் அமைச்சரவையை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகின்றார், மே மாத அளவில் முற்றுமுழுதாக எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்துகின்றார்.
நாட்டிலும் உலகத்திலும் ஏற்படுகின்ற இவ்வாறான சூழ் நிலையை நாங்களும் இதில் பங்கெடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே நாட்டுக்காகவும் நாங்கள் சில விடயங்களைத் தியாகம் பண்ண வேண்டியும் இருக்கின்றது. அந்த வகையிலே கடற்தொழிலாளருக்கான எரிபொருள் விலையேற்றம் கடற்தொழிலாளர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடற்தொழிலாளர்களின் செலவு
குறிப்பாக மண்ணெண்ணெய்க்கு விலை 60 ரூபாவால் உயர்த்தப்பட்டிருக்கிறது. 60 ரூபாவினால் உயர்த்தப் பட்டிருக்கின்ற நிலையிலே, ஒரு நாள் படகுக்கு எரிபொருள் தேவைக்காக மண்ணெண்ணெய், ஓயில், பெட்ரோலுக்காக கிட்டத்தட்ட 15,000 தொடக்கம் 20,000 வரையிலே கடற்தொழிலாளர்கள் செலவிட வேண்டி இருக்கிறது. இதற்கப்பால் அந்த கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக மூன்று பேர் கடலுக்குத் தொழிலுக்குச் செல்கின்றார்கள்.
கிட்டத்தட்ட அவர்களின் உழைப்பாக கிட்டத்தட்ட 30,000 குறைவான உழைப்பு கிடைக்குமாக இருந்தால் அவர்கள் கடனாளியாக கூடிய சூழல் ஏற்படுகின்றது. எனவே நாங்கள் எதிர்பார்ப்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்குள் நாங்கள் வாழ்கின்றோம். அந்த கட்டுப்பாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டில் நாங்களும் ஒரு பங்காளராக இருக்கின்றோம். எனவே சுயமாக நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
எரிபொருளை ஒரு கச்சிதமாகப் பயன்படுத்துவதோடு இந்த விலையேற்றத்தின் போது அதனை கையாளுகின்ற விதத்திலும் நாங்கள் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. இருந்தபோதிலும் அரசு இவ்வாறான விலையேற்றத்தின் போது கடற்தொழிலாளர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனவே கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த கடலை நம்பி இருக்கின்றது.
இந்தக் கடலின் ஊடாக நாங்கள் கடந்த காலங்களிலே பல துன்பங்களை அனுபவித்திருக்கிறோம். இந்திய கடற்தொழிலாளர்களாக இருக்கட்டும், டிட்வா புயலாக இருக்கட்டும், தொடர்ச்சியான இந்த அழுத்தங்களுக்கு அப்பால் இன்று விலையேற்றத்திற்கு நாங்கள் முகங்கொடுக்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam