கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான நெருக்கடி..! தீவிரமடைந்தால் எந்த நாடும் தப்ப முடியாதென எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையானது கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபாத்தி பிரோல் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலையை அவர் மிகவும் பாரதூரமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியானது 1970களில் ஏற்பட்ட இரண்டு பாரிய எண்ணெய் அதிர்ச்சிகளின் அளவையும் தாண்டிவிட்டது.
ஒவ்வொரு நெருக்கடியின் போதும் உலகம் ஒரு நாளைக்கு சுமார் 5 மில்லியன் பரல் எண்ணெயை இழந்தது. இரண்டும் சேர்த்து மொத்தம் 10 மில்லியன் பரல்கள். ஆனால் இன்று நாம் ஒரு நாளைக்கு 11 மில்லியன் பரல்களை இழந்துள்ளோம்.
இது அந்த இரண்டு பெரிய எண்ணெய் அதிர்ச்சிகளையும் விட அதிகம். உலகப் பொருளாதாரம் இப்போது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
இந்த நெருக்கடி தீவிரமடைந்தால் எந்த நாடும் இதிலிருந்து தப்ப முடியாது. நிலைமையை விரைவில் சுமூகமாக முடிக்க உலகளாவிய முயற்சிகள் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஆசிய பிராந்தியத்தில் எதிர்வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக சவூதி அரம்கோ இந்த விநியோகக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த முடிவினால் ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவு குறையும்.
இதன் விளைவாக, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் (பெட்ரோல், டீசல் போன்றவை) அளவும் குறையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விநியோகக் குறைப்பு, எதிர்வரும் மாதங்களில் ஆசிய பிராந்தியத்தில் எரிபொருள் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam