எரிவாயு விலையேற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை! அசேல சம்பத் கடும் சாடல்
சமையல் எரிவாயுவின் அதிரடி விலையேற்றம் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசிகள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பாவனையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீண்டும் விறகு மற்றும் சிரட்டை அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
துரதிஷ்டவசமான நிலை
அவர் மேலும் கூறுகையில், எரிவாயுவைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளதால், இனிவரும் காலங்களில் மக்கள் மீண்டும் பழைய முறையிலான விறகு அடுப்புகளுக்கே திரும்ப வேண்டியுள்ளது. குறிப்பாக, சிரட்டைகளைப் பயன்படுத்தி எவ்வாறு அடுப்புகளை உருவாக்குவது என்பது குறித்து மக்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
எரிவாயு விலையேற்றத்தால் உணவக உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இதன் விளைவாக கொத்து, ப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் பராட்டா, வடை மற்றும் தேநீர் போன்ற உணவுகளின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறைந்த வருமானம் பெறுவோரின் போஷாக்கு மட்டத்தைப் பாரியளவில் பாதிக்கும். மனிதாபிமான அடிப்படையில், மக்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் (உதாரணமாக 200 ரூபாவிற்கு) சோறு மற்றும் பருப்பு போன்ற அடிப்படை உணவுகளை வழங்க முன்வருமாறு உணவக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது
முறையான திட்டமிடல் இல்லாத தன்னிச்சையான விலை உயர்வுகள் மற்றும் நீர் விநியோகக் குறைபாடுகளால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது. முந்தைய காலங்களில் விலைகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய ஆட்சியாளர்கள் நிறுவனங்களின் இலாபத்தையே முதன்மையாகக் கருதுகின்றனர்.
நீர் ஆதாரங்கள் நிறைந்த இலங்கையில் தடையற்ற நீர் விநியோகத்தை வழங்கத் தவறியுள்ள அரசாங்கம், கிராம மட்டங்களில் கிணறுகள் மற்றும் குழாய் கிணறு திட்டங்களையாவது ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நுகர்வோரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் மக்கள் பெரும் பட்டினிச் சாவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.