பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷின் சில்லறை எரிபொருள் விலைகள் 1971 இல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அரசாங்கம் நேற்று(05) இரவு எரிபொருள் விலையை 51.7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று(06) முதல் அமுலுக்கு வரும் என்று சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சகத்தின் விலை அறிவிப்பின்படி, ஒரு லீட்டர் ஒக்டேன் பெட்ரோலின் விலை 51.7 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு தற்போது 135 டாக்காவாக ($1.43) விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலை 42.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு லீட்டருக்கு 114 டாக்காவாகவிலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது ஒவ்வொரு லீட்டர் பெட்ரோலின் விலையும் 130 டாக்கா, 44 டாக்கா அல்லது 51.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
அரசாங்கம் நடத்தும் விநியோக நிறுவனங்களின் மீதான மானிய சுமையை குறைக்க சில்லறை விலையில் சமீபத்திய விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை பங்களாதேஷத்தை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தை மோசமாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய ஜூன் மாதத்தில் 7.56 சதவீதமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது சுமார் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
