எரிபொருள் இறக்குமதியை குறைக்க முயற்சிக்கும் அரசாங்கம்
இந்தாண்டு முதல், இலங்கைக்கு இறக்குமதி செய்யும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை முடிந்த வரையில் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.
இலங்கையிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு பரல் மசகு எண்ணெய் 59 டொலர் விலையின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
அதேவேளை கடனுதவியின் அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவும் தடைவிதித்தது.
இறக்குமதிகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த பிரதிபலன்கள் இன்னும் அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.