எரிபொருளை கோரி அரசியல்வாதிகளை தொந்தரவு செய்யும் மக்கள்
மக்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை பெற்று தருமாறு கோரிக்கை விடுப்பது அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மக்கள் உட்பட பல்வேறு தரப்பிடம் இருந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை பெற்று தருமாறு தினமும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மக்கள் சந்திப்புகளை நிறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதன் காணமாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களும் கடும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதுடன் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சந்திப்புகளில் கலந்துக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
சில நபர்கள் தமது வீடுகளுக்கும் வந்து எரிபொருள் கேட்டு கலகம் செய்வதாகவும் மேலும் சிலர் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு எரிபொருளை பெற்றுக்கொடுக்க உதவுமாறு கோருவதாகவும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பு தொழில் கேட்டவர்கள் தற்போது எரிபொருளை கோருகின்றனர்
அமைச்சர்களிடம் இதற்கு முன்னர் தொழில் மற்றும் பதவி உயர்வுகள் அல்லது இடமாற்றங்களை கோரியதாகவும் தற்போது 10 அல்லது 15 லீட்டர் எரிபொருளை பெற்று தருமாறு கோருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது மிகவும் பிரச்சினையான நிலைமையாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே எரிபொருள் பிரச்சினை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.