இலங்கையில் விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சர் விசேட கவனம்
விமானங்களுக்கான எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக வெளியாகும் செய்தி தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சிவில் விமான சேவை அதிகாரிகள் மற்றும் துறைமுகங்கள், கப்பற்போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால இதன்போது விமானங்களுக்கான எரிபொருள் கையிருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
தற்போதைய கையிருப்பில் உள்ள விமானங்களுக்கான எரிபொருள் இன்னும் ஆறு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எரிபொருளுடன் வருகை தந்துள்ள கப்பல்
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர், தற்போதைக்கு துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிய கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாகவும், இன்னும் நான்கு நாட்களுக்குள் குறித்த எரிபொருளை சுத்திகரித்து வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தினால் சுத்திகரிக்கப்படும் விமானங்களுக்கான எரிபொருளில் 60% வீதத்தை உள்நாட்டு விமானங்களுக்கும், 40% வீதத்தை சர்வதேச விமானங்களுக்கும் வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.