எரிபொருள், எரிவாயு தட்டுப்பாட்டினால், மனித உரிமை மீறல்! அரசாங்கத்துக்கு அழுத்தம்!
நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியின் விளைவாக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், எரிசக்தி அமைச்சு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்து, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வரிசையில் நிற்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறுவன மட்டத்தில் தீர்வுகளை ஆராயுமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை வகுக்கவேண்டும். அத்துடன் அவசரமான தேவை என்பதை கருதி பிரச்சினைக்கு தீர்வுகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.