ஆளுநரின் தலையீட்டினால் சாரதி காப்பாளர்களுக்கு கிடைக்கவுள்ள எரிபொருள்
வடமாகாண ஆளுநரின் தலையீட்டினால் போக்குவரத்து சபை சாரதி காப்பாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் தலையீட்டினாலேயே இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளில் கடமையாற்றும் சாரதி மற்றும் காப்பாளர்களுக்கு இவ்வாறு எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுநர் தலையீடு
இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளில் கடமையாற்றும் சாரதி மற்றும் காப்பாளர்கள் கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் தமக்கு வழங்கவில்லை என ஊடக சந்திப்பொன்றை நடத்திய நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிரதான முகாமையாளரரை தொடர்புகொண்டு போக்குவரத்து சேவை அத்தியாவசிய தேவையாக கருதப்படுகின்றது.
இதனை தடையின்றி மேற்கொள்வதற்கு சாரதி காப்பாளர்கள் கடமைக்கு செல்வதற்கான எரிபொருளை வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடுமாறு தெரிவித்திருந்தார்.
தீர்வு
வடபிராந்திய பிரதி முகாமையாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண பெட்ரோலிய கூட்டுத்தாபன முகாமையாளருக்குமிடையில் நேற்று முன்தினம்(27) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு முள்ளியவளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை மன்னார் சாலையை சேர்ந்தவர்களுக்கு மன்னாரிலேயே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியாவை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு நேற்றைய தினம்(28) எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.