எரிபொருள் ஒதுக்கீட்டின் மூலம் இடம்பெறும் மோசடி! வெளிவரும் தகவல்
மேல்மாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர்.
மேல்மாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக பதிவுக் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு
இந்நிலையில் பதிவுக் கட்டணம் என்ற போர்வையில் மேலதிக பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பதிவுக் கட்டணத்தைச் செலுத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு மேலதிகமாக ஐந்து லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
பதிவு கட்டணம்
முச்சக்கர வண்டிகளின் பதிவு தொடர்பான தகவல்களை www.wptaxi.lk என்ற இணையத்தளத்தை அணுகி பெற்றுக்கொள்ளுமாறு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி பதிவு செய்வதற்காக தகவல்களை சமர்ப்பித்த முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு சாரதியின் கணக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கணக்கை செயல்படுத்த பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள முகவரியுடன் கூடிய குறுஞ்செய்தியின் ஊடாக இணையதளத்தை அணுகும் போது, பதிவுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுதில் ஜயருக் குற்றம் சுமத்தியுள்ளார்.