திலினி பிரியமாலியின் நிதி மோசடி விவகாரம்-பிரபல நடிகை சங்கீதாவிடம் விசாரணை
திலினி பிரியமாலியின் மிகப் பெரிய நிதி மோசடி சம்பந்தமாக நடத்தப்படும் விசேட விசாரணைகளுக்கு அமைய பிரபல நடிகை சங்கீதா வீரரத்னவிடம், குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று விரிவான விசாரணைகளை நடத்தி, வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
நடிகை சங்கீதாவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை
திரைப்பட நடிகை சங்கீதா வீரரத்னவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்ததாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், பௌத்த பிக்குகள் உட்பட பலரை ஏமாற்றி பல பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்ததன் காரணமாக நடிகை சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பல முறை அறிவித்தும் விசாரணைக்கு முன்னிலையாகாத நடிகைகள்
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பல முறை நடிகை சங்கீதா மற்றுமொரு இளம் நடிகைக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் முன்னிலையாகவில்லை என்பதால், அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, குற்றவியல் விசாரணை திணைக்களம் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
இவ்வாறான நிலையில், அரச விடுமுறை தினமான நேற்று முற்பகல் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வந்த நடிகை சங்கீதா வீரரத்ன, வாக்குமூலத்தை வழங்கி விட்டு, பிற்பகல் 2.30 அளவில், அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அதேவேளை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய குற்றவியல் விசாரணைதிணைக்களம் நேற்று சிறைச்சாலைக்கு சென்று திலினி பிரியமாலியிடம் மீண்டும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
சுமார் 4 மணி நேரம் பிரியமாலியிடம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்ததாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.