வவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து - ஒருவர் காயம்
வவுனியா கண்டி வீதியில் வன்னி இராணுவ தலைமையகத்திற்கு அருகே நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 11.30 மணியளவில் ,இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து கண்டி வீதியூடாக தென்பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் திரும்புவதினை அவதானித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த ஹயஸ் வாகனமும், பாரவூர்தியும் தரித்து நின்றுள்ளது.
இதன் போது பாரவூர்தியின் பின் தொடர்ந்து வந்த பட்டா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து பாரவூர்த்தியின் பின்பகுதியில் மோதியதுடன், பாரவூர்த்தி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து ஹயஸ் வாகனத்துடன் மோதுண்டதுடன் ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.
இவ்விபத்தில் பட்டா ரக வாகனம், பாரவூர்தி, ஹயஸ், மோட்டார் சைக்கிள் ஆகிய நான்கு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













