முன்னாள் அமைச்சர் ஃபௌசி மீதான ஊழல் குற்றச்சாட்டு - திமன்றம் எடுத்துள்ள முக்கிய முடிவு
முன்னாள் அமைச்சர் ஏ. எச்.எம். ஃபௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இலங்கையில் பேரிடர் முகாமைத்துவப் பணிகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியதன் மூலம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். ஃபௌசி அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் எனத் தீர்ப்பளிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று(23.06.2026) நடைபெற்றுள்ளது.
17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள்
ஏ. எச்.எம். ஃபௌசி மீதான குற்றச்சாட்டு
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட அமர்வின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவரான சந்திர ஜெயரத்ன என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி அமில குமாரவின் ஆலோசனையின் பேரில் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திலுமி டி அல்விஸ், இந்த வழக்கிற்கு உட்பட்ட வாகனம், இலங்கையில் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நெதர்லாந்து அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்குக் கடனுதவி அடிப்படையில் வழங்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பாவணை
சுனாமிப் பேரிடர் தொடர்பான பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக அந்த வாகனம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அப்போதைக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய ஏ. எச். எம். பௌசி, சுமார் ஐந்து ஆண்டுகளாக அதனைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தி வந்தார் என்று சட்டத்தரணி திலுமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, 'இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது, மேலும் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்படி, இந்த வழக்கை முன்கொண்டு செல்வதற்கான நோக்கம் என்னவென்று வினவினார். பதிலளித்த மனுதாரரின் சட்டத்தரணி, குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டஒரு வழக்கிலேயே குற்றச்சாட்டுகளை மனுதாரர் ஒப்புக்கொண்டுள்ளார் இருப்பினும், இந்த வழக்கு ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில், இலங்கையில் பேரிடர் முகாமைத்துவப் பணிகளுக்காகக் கடனாக வழங்கப்பட்ட ஒரு வாகனத்தை பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்டார் என்றும், இதன் மூலம் அவர் வரி செலுத்துவோரின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
மேலும், அவர் “பொதுமக்கள் நம்பிக்கை” என்ற பொறுப்புமிக்க கடமையையும் மீறியுள்ளார் என்று சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். எனவே, இந்த நடவடிக்கையின் மூலம், அமைச்சரால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை மீட்கும் நோக்கத்தில், மனுதாரர் இந்த வழக்கை ஒரு பொதுநல வழக்காகத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கில் இருந்து குற்றவாளி தப்பிக்க முடியுமா?
அதன் பின்னர், வழக்கறிஞர் ரம்சி பாச்சாவின் ஆலோசனையின் பேரில், பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ஃபௌஸியின் சார்பில் வழக்கறிஞர் ருவந்த குரே வாதங்களை முன்வைத்துள்ளார். பேரிடர் முகாமைத்துவப் பணிகளுக்காக வழங்கப்பட்ட வாகனத்தைத் தனது கட்சிக்காரர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தினார் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டுகளைத் தாம் வன்மையாக மறுப்பதாகவும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்த நிலையில்,பிரதம நீதியரசர் பிரதிவாதியின் சட்டத்தரணியிடம் ஒரு கேள்வியை எழுப்பி, 'இந்தச் சம்பவம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், லஞ்ச ஆணைக்குழு பிரதிவாதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. பிரதிவாதி அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறினார்.
இதன்படி, அவர் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்து அவரால் தப்பிக்க முடியுமா? என்று அவர் கேட்டார்.
அலுவலக தேவைக்களுக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டது..
இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் ருவந்த குரே, அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவின்படி, பேரிடர் முகாமைத்துவ நிலையத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரே பிரதிவாதி இந்த வாகனத்தைப் பயன்படுத்தினார் என்று கூறினார்.
அமைச்சில் போதுமான வாகன வசதிகள் இல்லாததால், அமைச்சு செயலாளரின் உத்தரவின்படி, இந்த வாகனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும், அது ஒருபோதும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர் அதைத் தனது அலுவல் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மனு மீதான விசாரணையை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதுடன், இரு தரப்பு சட்டத்தரணிகளும் இரண்டு வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு திகதியிடப்படாமல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.