பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பேருந்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்த போலி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(03) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இது பற்றி தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் பேருந்தில் பிரயாணித்த ஒருவரிடம் நடத்துநர் கட்டணத்தை கேட்டபோது, அவர் தான் மாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கட்டணம் தரமுடியாது என தெரிவித்து பிரயாணத்தை தொடர்ந்துள்ளார்.
இந்தநிலையில் பேருந்து மாரகமவைச் சென்று நிறுத்தப்பட்டதும் அவர் அதில் இருந்து இறங்கிய போது, அவரை பேருந்து நடத்துநர் பின் தொடர்ந்தபோது அவர் பொலிஸ் நிலையத்துக்குள் உள்நுழைவதை கண்டு அங்கு சென்ற போது, பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக வேறு ஒருவர் சீருடையில் இருப்பதை கண்டு நடத்துநர் திகைப்படைந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நடந்ததை தெரிவித்ததையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி என போலியாக செயல்பட்ட குறித்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணையில், அவர் கடந்த காலத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ள ஜீவந்த என்பவரான இவர், பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் என கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து போலியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




