வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகளால் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி கைது (PHOTOS)
மட்டக்களப்பில் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக ஒருவரிடம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 22 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணமோசடி செய்த போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டிற்கு நேற்று (13.08.2023) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சென்ற வேலைவாய்ப்பு பணியகத்தினரால் முற்றுகையிடப்பட்டு இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
போலி முகவருக்கு எதிராக முறைப்பாடு
கொழும்பு வேலைவாய்ப்பு பணியகத்தில், மட்டக்களப்பு - அமிர்தகழி பிரதேசத்தைச் சேர்ந்த
போலி முகவரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக தலா ஒருவர் 4 இலட்சத்து 50
ஆயிரம் ரூபாவை வழங்கிய நிலையில், அவர் வெளிநாட்டுக்கு அனுப்பாது ஏமாற்றி வந்த
காரணத்தால் போலி முகவருக்கு எதிராக இருவர் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தொடர் விசாரணையில் குறித்த நபர் தலா 4 இலட்சம் ரூபா வீதம் 22 பேரிடம் பணமோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மட்டக்களப்பு தலைமைப் பொலிஸாரின் உதவியுடன் குறித்த போலி முகவரின் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்து மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



