இந்தியாவில் இருந்து வரும் 40 மில்லியன் உணவு பொதிகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு வார காலத்திற்கு தேவையான பால் மா உட்பட உலர் உணவுகள் அடங்கிய 40 மில்லியன் உணவு பொதிகளை இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
இந்திய வழங்கியுள்ள இந்த அன்பளிப்பு பொதிகள் அடங்கிய முதல் தொகையை ஏற்றிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடைய உள்ளதாக அத்தியவசிய உணவு விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம், பதுளை உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை கவனத்தில் கொண்டு 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால் மா, 137 வகை உயிர்காக்கும் மருந்து உட்பட அத்தியவசிய பொருட்களை தமிழக அரசாங்கம், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் ஊடாக நாளைய தினம் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.