கிளிநொச்சி வியாபார நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள்(Photos)
கிளிநொச்சியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது பாவனைக்க உதவாத இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனை நடவடிக்கையானது இன்று (02.07.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் நகரில் அமைந்துள்ள உணவகங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
திடீர் பரிசோதனை நடவடிக்கை
இதேவேளை கிளிநொச்சி பொதுச்சந்தையின் மாட்டிறைச்சி விற்பனை கடையில் அனுமதியின்றி வெட்டப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ வரையான மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏ9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் வீதியில் அமைந்துள்ள பல உணவகங்களும் சோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டிருந்தன.
இதன்போது சமைத்த உணவுகளுடன், சமைக்காத இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் ஒரே குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டு குறித்த உணவுப்பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பயன்பாட்டிற்கு உதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தைக்குள் பழக்கடைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்த பழங்களை பழுக்க வைப்பதற்கான இரசாயன திரவியங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் சட்டத்திட்டங்களுக்கு மாறாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |