வெள்ளத்தினால் கடுமையான பாதிப்பு! யாரும் உதவி செய்யவில்லை என்று கடற்தொழிலாளர்கள் கவலை
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மன்னார் பனங்கட்டுகொட்டு கடற்தொழிலாளர்களுக்கு உதவி வழங்க யாரும் இதுவரையில் முன்வரவில்லை என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் அண்மையில் பாரிய உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தி சென்ற புயலினால் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களும் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள போதும் இதுவரை யாரும் தம்மை வந்து பார்த்து தமக்கு எவ்வித உதவிகளும் வழங்க முன்வரவில்லை என மன்னார் பனங்கட்டுகொட்டு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
குறிப்பாக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள்,யாரும் பாதிப்புகள் தொடர்பாக கேட்கவில்லை என்றும் எந்த ஒரு நிவாரணங்களும் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் புயலின் பின்னர் நாங்கள் அரசால் கைவிடப்பட்டுள்ளது போல் உணர்கிறோம் என குறித்த கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,''ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு சென்றால் மட்டுமே எங்களுக்கு சாப்பாடு. இனி ஒரு மாசத்துக்கு கடலில் தொழிலுக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.
எந்த அரச நிறுவனம், அமைச்சர்கள், ஆளுநர், அதிகாரிகள் எம்மை வந்து சந்திக்கவும் இல்லை. எங்களுடைய குறைகளை கேட்கவும் இல்லை அன்றாட உணவுக்கு பெரும் சிரமப்படும் நிலையில் எமது கடற்தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
கடந்த புயல் வெள்ளத்தின் போது எமது படகுகளை கொண்டு சென்று பலரை காப்பாற்றிய எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இல்லை.
மழை நீரில் அடித்து வரப்பட்ட ஆடு ,மாடு விலங்குகள் மனித உடல்கள் போன்ற கழிவுகள் எல்லாம் எமது கடல் பகுதியில் நிறைந்து காணப்படுகிறது. அதனால் எமது கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு போவதில்லை.
கடல் முழுவதும் சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. கடலுக்கு சென்றாலும் மீன் கிடைப்பதில்லை. எமது படகுகள், வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்
மீனவ மக்களுக்கு எங்களது சங்கத்தின் மூலம் நாங்கள் கடன் எடுத்துக் கொடுத்திருக்கின்றோம். அவர்களுக்குரிய தொழில் எல்லாம் இந்த புயலால் நிர்மூலம் ஆகியுள்ளது. ஆகவே அந்த கடனை அவர்கள் எவ்வாறு கட்டப் போகிறார்கள்.
அவர்களது குடும்பத்திற்கு ஒவ்வொரு நாளும் எவ்வாறு உணவு கொடுக்கப் போகிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புயல் வெள்ளத்தில் இறந்தவர்களை விட மன்னாரில் மீனவ மக்கள் பட்டினியால் சாகப் போகிறார்கள். அப்படி ஒரு நிலைமைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே அரசாங்கம் இதை கருத்தில் கொண்டு எமது மக்களுக்கு நிவாரணத்தை விரைவாக கொடுக்க வேண்டும்.
கடற்தொழில் அமைச்சர் ,அரச அதிகாரிகளோ மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எம்மை வந்து சந்தித்து எமது கடற்தொழிலாளர்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என குறித்த கடற்தொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.