வெள்ளத்தினால் அழிந்த பூசணி பயிர்ச்செய்கை! பல இலட்சம் ரூபாவை இழந்த விவசாயி
திருகோணமலை - சேருநுவர, ஸ்ரீமங்கலபுர பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பூசணிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்துவிட்டதாகவும், இதனால் பாரிய பொருளாதார இழப்புகளை சந்தித்து வருவதாகவும் விவசாயி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த விவசாயி, பல ஆண்டுகளாக தமது வாழ்வாதாரமாக பூசணிப்பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றார்.
15 லட்சம் நட்டம்
இந்த வருடமும் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து முறையாக பராமரிக்கப்பட்ட தோட்டங்கள், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தன. எனினும், எதிர்பாராத விதமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக தோட்டங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

நீண்ட நாட்களாக தோட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியிருந்ததால், பூசணிக்காய்கள் அனைத்தும் செடியிலேயே அழுகத்தொடங்கியுள்ளன.
அறுவடைக்குத் தயாராக இருந்த விளைச்சல்கள், முழுமையாக சேதமடைந்துள்ளது. பல மாதங்கள் கடுமையாக உழைத்து, கடன் இல்லாமல் இந்தப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டோம். இவை, அறுவடைக்கு தயாரான நேரத்தில் இயற்கை சீற்றத்தால் எங்களது உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது.
வேண்டுகோள் விடுத்த விவசாயி

மேலும், கத்தரிக்காய் ஒரு ஏக்கர் மற்றும் பூசணிக்காய் ஒரு ஏக்கர் என மொத்தமாக இரண்டு ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டு, இதற்காக சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், தற்போதைய நிலைமையில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மனிதநேய உள்ளங்கள் தமக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
