இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமை காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் இன்று (8.4.2023) காலை தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்பக் கோளாறு
சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் நேற்று (07) மாலை 06.25 மணிக்கு டுபாய் நோக்கிப் புறப்படவிருந்த நிலையில் 15 மணித்தியாலங்கள் தாமதத்திற்குப் பின்னர் இன்று (08) காலை 09.30 மணிக்குப் புறப்பட்டது.
எனினும் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களுக்குப் பின்னர் 10.40 மணியளவில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானிக்கு முன்பாகவுள்ள கண்ணாடியில் ( windshield ) விரிசல் ஏற்பட்டமையால் விமானம் தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்று விமானத்தில் டுபாய்க்கு புறப்படும் பயணிகள்
இதன்போது விமானத்தில் 189 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
இந்த விமானத்தின் பயணிகள் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாற்று விமானத்தில் டுபாய்க்கு புறப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சீரற்ற காலநிலை
மேலும், கடும் மழையுடனான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் மற்றும் விமான நிலையத்துக்கு உள்வரும் சில விமானங்களின் பயணங்கள் தாமதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை 4.45 மணிக்கு, டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த UL226 என்ற விமானம், இன்று மாலை 4.55 மணிக்கு நாட்டை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேற்றிரவு 7 மணிக்கு, ஜப்பான் நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்று, இன்று அதிகாலை 1.50 மணிக்குப் புறப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.40 மணிக்கு மும்பை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்று, இன்று அதிகாலை 5.35 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதேநேரம், சீனாவில் இருந்து வந்த எம்.எல். 231 என்ற விமானம் மாலைதீவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், குவைத்தில் இருந்து வந்த யு.எல். 230 என்ற விமானம் மத்தள விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில், இன்று கடும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக செய்தி: ராகேஷ்