நெல்லுக்கான நிர்ணய விலை குறித்து விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை
அறுவடை முடிவடையும் காலம் அண்மித்துள்ள நிலையில் இதுவரையில் நெல்லுக்கான நிர்ணய விலை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படாமை வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் என்றும் இல்லாதவாறு கடுமையான நோய் தாக்கம் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் குறைந்த அளவிலான நெல் மூடைகளையே அறுவடை செய்துள்ளனர்.
இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லினை தமது செலவினத்தை கூடபெற முடியாத நிலையில் நெல்லினை இடைத்தரகர்களுக்கு அதி குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறு போக நெற்செய்கை
எமது உழைப்பில் அறுவடை செய்த நெல்லினை எம்மால் விலை தீர்மானிக்க முடியாத நிலையில் கேட்கும் விலைக்கும் விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக அறுவடை முடிவதற்கு ஓரிரு வாரங்களே உள்ளன. தற்பொழுது மழையிலும் வெயிலிலும் நனைந்து மிகுதியாக உள்ள வயல்களில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் உலர விட்ட போதிலும் தேறிய முழுமையான நெல் மணிகளாக காண முடியாத நிலை உள்ளது.
இந்தநிலை தொடருமாயின் அடுத்து வர இருக்கும் சிறு போக நெற்செய்கைக்கு விதைப்புக்கான நெல்லினை பெற முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படக்கூடும்.
கொடுப்பனவு
ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் அறுவடையின் போது விதைப்புக்கென தரமான நெல்லினை தெரிவு செய்து பாதுகாப்பாக எடுத்து வைத்த பின்னரே நெல்லினை விற்பனை செய்வது வழக்கம் கடந்த வருடமும் சரி இந்த வருடமும் சரி அந்த நிலை அற்றுப் போய் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் எமக்கான விதை நெல் மற்றும் மானிய உரங்கள் மற்றும் எமக்கான கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |