2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
அவுஸ்திரேலியாவிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கான ஒரு தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது.
திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவிற்கு ஏ. என். ஹப்புகல மற்றும் எஸ். எஸ். முதலிகே ஆகியோர் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே. டி. ஐ. பிரேமரத்ன, சட்ட விவகாரங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ. கே. டி. டி. அரந்தர, தகவல் தொழில்நுட்ப மேலாண்மை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ. டி. சிரந்த. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட இந்த நிதி மாயமானதற்கு, மின்னஞ்சல் (Email) மூலம் பெறப்பட்ட போலியான கட்டண அறிவுறுத்தல்கள் காரணமாக இருக்கலாம் என அமைச்சு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அத்தகைய மோசடியான அறிவுறுத்தல்களால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் நிதி பரிமாற்றத்தில் நடந்த தவறுகள் குறித்து இந்தக் குழு விரிவாக ஆராயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை முன்னெடுத்து, அதன் அறிக்கையை மிக விரைவில் சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.