அனுமதிப்பத்திர விதிமுறைகளுக்கு முரணாக மணல் ஏற்றிச்சென்ற ஐந்து கனரக வாகனங்கள்
அனுமதிப்பத்திர விதிமுறைகளுக்கு முரணாக மணல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஐந்து கனரக வாகனங்கள் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் சாரதிகள் ஐவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிளியூ.கே ஜயந்த தெரிவித்துள்ளார்.
மணல் ஏற்றிச்செல்வதற்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ள போதிலும் வாகனத்தின் கொள்ளளவை விட மேலதிகமாக மணல் ஏற்றப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் கரடியனாறு பகுதியிலிருந்து மேல் மாகாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது செங்கலடி கறுத்தப்பாலம் பிரதேசத்தில் பொலிஸார் சோதனையில் சிக்கியுள்ளன.
ஏறாவூர்ப் பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் எச்.எம்.ஷியாம் தலைமையிலான குழுவினர் இச்சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.