திருகோணமலையில் கடலட்டைகளுடன் ஐவர் கைது!
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாயிப் நகர் கடற்கரையில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்றுமுன்தினம்(27.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையில், கடலட்டை பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடலட்டை பிடிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலட்டைகளுடன் ஐவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சீனக்குடா, கிண்ணியா மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, படகும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், லொறி ஒன்றும், வெளிப்புற படகு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதோடு, சுமார் 70 கடலட்டைகள், 6 ஒட்சிசன் தாங்கிகள் மற்றும் உபகரண தொகுதி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நேற்று(28) மூதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

