தமிழர் நில ஆக்கிரமிப்புகளிலும் நீதியை நிலை நாட்டுங்கள்..! அருட்தந்தை மா.சத்திவேல்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள் மீதான நடவடிக்கையை வரவேற்பதோடு தமிழர் நில ஆக்கிரமிப்புகளிலும் நீதியை நிலை நாட்டுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
நேற்று(28.04.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள, பௌத்த பேரினவாதம்
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலக சமாதானத்திற்காக பிக்குகளின் நடைப்பயணத்தை பின் தள்ளி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்தல் காரணமாக கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பாக செய்தியானது நாடு முழுவதும் முக்கியமானதொரு பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளை உடனடியாக பிக்கு நிலையில் இருந்து நீக்குவதற்கான அதிரடி நடவடிக்கையினை நான்கு மஹநாயக்க சங்க தலைமை பீடங்களும் கூட்டாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
நீதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு இது துணை செய்யும் ஒர் நடவடிக்கையாகும்.

மேலும், சிங்கள, பௌத்த பேரினவாதம் போதையாகி உள்ள இலங்கையில் அதன் போதை தலைக்கேறி காவி உடையோடு பிக்குகள் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தும் புத்தரின் சிலைகளை ஆங்காங்கு வைத்தும் தமிழர் பகுதிகளில் அமைதி வாழ்வினை சீர்குலைக்கும் பௌத்த தர்மத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக எந்த ஒரு மகா சங்கத்தினரும் நடவடிக்கை எடுக்காதிருப்பது தமிழர்களுக்கு கவலையையும் வேதனையையும் தருகின்றது.
அத்துடன், எந்த சமயத்தவர்களாக இருந்தாலும் சமய அடையாளங்களை பாவித்து சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஏற்கவோ,அங்கீகரிக்கவோ முடியாது. இவ்வாறு ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகளாவதுடன் தண்டனைக்குரிய குற்றவாளியுமாவர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
இந்த சிங்கள,பௌத்த பேரினவாதமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் வழிவகைத்தது என்பதை அனைவரும் அறிவர். முள்ளிவாய்க்காலோடு நின்று விடாது இன்றும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக பகிரங்கமாக இனவாதம் கக்கும் ஞான சார தேரர், கஸ்ஸப தேரர், அம்பட்டிய சுமனரத்ன தேரர் போன்றோர் பௌத்த தர்மத்திற்கு எதிராக பகிரங்கமாகவே செயற்படுகின்றனர்.
இது தெரிந்தும் பிக்கு நிலையிலிருந்து அவர்களை அகற்றுவதற்கு மட்டுமல்ல அவர்களின் செயலை கண்டிப்பதற்குக்கூட எந்த ஒரு மகா சங்கத்தினரும் துணியாது அமைதி காப்பது ஏன்?

அதுமட்டுமல்ல, வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்தும், சிங்கள பௌத்தர்களே இல்லாத இடங்களில் எல்லாம் பலாத்காரமாக அரச மரக்கன்றுகளை நடுவதும், புத்தர் சிலைகளை வைப்பதும் பௌத்த தர்மத்திற்கு எதிரானது என தெரிந்தும் போதை வஸ்து கடத்தலில் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பாக நடுநிலை கருத்து தெரிவிக்கும் பிக்குகளும் அமைப்புகளும் வாய் திறக்காதிருப்பது ஏன் ?
தையிட்டியில் தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீக காணியிலேயே ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு இராணுவத்தால் சட்டவிரோத விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சட்ட விரோதமமாக செயற்பட்ட பிக்குமார்களுக்கு ஆதரவாகவே பொலிசாரும் செயல்படுகின்றனர்.
மக்களின் காணிகள் விடுக்கப்பட வேண்டும்
இந்தச் சூழ்நிலையில் நீதியை நிலை நாட்டுவதற்கு பௌத்த தர்ம போதனைகளின் வழி நின்று மகா சங்கத்தினர் செயற்படாதிருப்பது ஏன்? அது தமிழர்களின் காணியாகும். இவ்வாறு நீங்கள் செயற்படுவது பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்காகவா?
மக்களை விழிப்பு நிலைக்கு தள்ளாது போதை மயக்க நிலைக்குள் தள்ளுபவை அனைத்துமே ஆபத்தானவைகளே ஆகும்.

அத்துடன் உலக சமாதானத்திற்கான பாத யாத்திரையை வரவேற்கின்றோம். ஆனால் அதே பாத யாத்திரை இன்று சுய விளம்பரத்திற்காகவும்,சுய அரசியலுக்காகவும், சிங்கள பௌத்த மக்களை கவர்வதற்காகவும் பாவிப்பது பௌத்த போதனைக்கும் தர்மத்திற்கும் எதிரானதே.
இதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு எதிராகவும் பௌத்த நலன் விரும்பிகள் குரல் எழுப்ப வேண்டும்.
எம்மைப் பொறுத்தவரையில் சமாதானம் என்பது அரசியல், பொருளாதாரம், சமத்துவம், இனங்களின் தனித்துவ கௌரவம் மற்றும் நில உரிமை சார்ந்தது. அது காக்கப்படுவதன் மூலமே சகோதரத்துவம் நிலைநதட்டப்படும் என்பதுடன் நாட்டில் அமைதிக்கும்.அது பங்காற்றும்.
தற்போது பௌத்தத்தை பாதுகாப்பதாக கருத்து தெரிவித்துக் கொண்டு இருக்கின்ற அனைத்து தரப்பினரும் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டும் போதே நாட்டின் எதிர்காலம் நலமானதாக அமையும். இதன் மூலமே பௌத்தம் காக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். என தெரிவித்திருந்தார்.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்