இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக கொழும்பில் திரண்ட மீனவர்கள் (Photos)
வடமாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் ஹர்மன் குமார தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய இழுவைப்படகு வருகையை உடனடியாக நிறுத்த வேண்டும், தங்களது கடல் வளத்தை தாங்களே ஆள வேண்டும், கடல் வளத்தை சூறையாடும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக மாவட்ட ரீதியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அலுவலகங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தங்கள்
எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக இன்று கொழும்பை
முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.








