சாய்ந்தமருது பகுதியில் கடற்றொழிலாளர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் (video)
நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது கடற்றொழிலாளர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
குறித்த போராட்டம் இன்று (18.09.2023) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடலரிப்பு
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், கடற்றெழில் நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக தெரிவித்தும் சாய்ந்தமருது கடற்றொழிலாளர்களும் மீனவ வாடி உரிமையாளர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமான கடும் கடலரிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த கடலரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் ஓய்வு அறைகள் வாடிகள் பள்ளிவாசல்கள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் கடற்றொழிலாளர்களின் தோணிகள் வலைகள் கடலரிப்பினால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.
கடற்றொழிலுக்கு பாதிப்பு
மேலும் குறித்த கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைககளை மேற்கொண்டுள்ளதுடன் பாரிய கற்களும் வெளியிடங்களில் இருந்து கனரக வாகனங்களின் உதவியுடன் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால் இக்கற்கள் தமது கடற்றொழில் பாதிப்புறும் வகையில் போடப்பட்டுள்ளதாகவும் கற்களில் மோதி தமது தோணிகள் உடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் குறித்த போராட்டத்தை சாய்ந்தமருது பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தள்ளதுடன் கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



