விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் இன்று மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 30 மீனவர்கள் விவசாயிகள் குறித்த ஆற்றுப்பகுதியில் சமூக இடைவெளியைப் பேணி தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாகச் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகிச் செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாங்கள் மண் அகழ்வில் ஈடுபடுவோரிடம் ஏதும் கேட்டால் அவர்கள் தங்களைத் தாக்குவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் மீனவர்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளார்.
தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டும் இதைத் தடுக்க முடித்துள்ளதாகக் குற்றம் சாட்டும் மீனவ விவசாயிகள் தமது பிரச்சினை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியால் இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



