மட்டு. கடலில் படகு விபத்து! மீனவர் மாயம்
மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து நேற்று மாலை கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றவர் காணாமல்போயுள்ள நிலையில் அவர் சென்ற இயந்திரப்படகு கிரான்குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீனவர்களினால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியிருந்து நேற்று மாலை மீன்பிடிக்காக சுவிஸ்கிராமம் பகுதியை சேர்ந்த எஸ்.சுரேஸ்குமார் என்னும் நபர் இயந்திரப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
நேற்று மாலை நேரத்திற்கு பின்னர் கடலில் சீற்றம் காணப்பட்ட நிலையில் குறித்த நபர் காணாமல்போயிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை குறித்த நபர் மீன்பிடிக்க சென்ற படகு கிரான்குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அவை மீட்கப்பட்டு முகத்துவாரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் அதில் மீன்பிடிக்காக சென்றவர் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் பயணம் செய்த படகினுள் அவர் பிடித்த மீன்கள் உள்ள நிலையில் ஒரு தொகுதி வலை மட்டுமே உள்ளதாகவும் மீதி வலை கடலுக்குள் சென்றுவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் குறித்த நபரின் குடும்பம் மிகவும் வறுமையானது எனவும் குறித்த நபர் மீன்பிடித்து வந்தால்தான் வீட்டில் உணவு சமைக்கப்படும் நிலையுள்ளதாகவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், காணாமல்போன மீனவரை தேடும் பணிகளில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு, முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதுடன் படகு செட்டிபாளையம் கடல் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மட்டு. திரைய்மடு, சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மீனவர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ததையடுத்து அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கவிழ்ந்த படகு செட்டிப்பாளையம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாகவும், காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |