திருகோணமலையில் கடற்தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை திருக்கடலூர் மற்றும் விஜிதபுர கடற்தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.ஷாஹிர் முன்னிலையில் நேற்று (07.04.2023) முன்னிலைப்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை- திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரும் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த மூவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கடலூர் கடலோரத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது தாக்குதல்களை மேற்கொண்டதுடன் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சில சந்தேகநபர்கள் தலைமறைவு
இதேவேளை கடற்தொழிலாளர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது வீடு ஒன்றுக்குள் சென்று உப்புகுந்து வீட்டுக்கு சேதம் விளைவித்ததுடன் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கைகலப்பின் போது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.





