மருதகங்கேணியில் அமைச்சர் டக்ளஸின் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இடம் பெற்ற மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க பொலிசாரால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரின் பிரதிநிதி ஒருவரிடம் கேட்டபோது,
தாம் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதியை மறுக்கவில்லை என்றும் மருதங்கேணி பொலிசாரே அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை என்ன விடயங்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என கட்டைக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரிடம் கேட்டபோது தாம் பத்தாண்டுக்கு மேலாக உழவு இயந்திரம் பயன்படுத்தி இருபதிற்கு மேற்பட்ட கம்பான் என்று சொல்லப்படுகின்ற நயிலோன் கயிற்றை பயன்படுத்தி கரவலை தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்போது அது கடற்றொழில் அமைச்சால் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை தர வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடலட்டை தொழிலில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கோரியதாகவும், கடலிற்க்குள் இலை குழை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரியதாகவும் அதனடிப்படையில் ஒரு வாரத்திற்குள் உழவியந்திரம் பயன்படுத்தி கரவலை தொழிலில் ஈடுபடவும், கடலட்டை பிடிப்பதற்க்கு பிரதேச மீனவர்களுக்கு மட்டும் அனுமதிப்பதென்றும், கடலில் இலை குழை பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்க முற்றாக தடை விதிப்பதாகவும் தீர்மானித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை இன்று இடம் பெற்ற ஒன்று கூடல்களிற்கு சென்றவர்களுக்கு கைகழுவ வசதி செய்யப்படவில்லை என்பதுடன் சமூக இடைவெளியும் பேணப்படவில்லை.
திருமணம் உட்பட்ட நிகழ்வுகழில் குறிப்பிட்ட ஒருசிலரே அனுமதிக்கப்பட்டு அதிகமாக யாராவது சென்றால் அவர்களை தனிமைப்படுத்தும் போலீஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் இன்று அதிகளவிலான ஆட்கள் பங்கு கொண்ட இந்த கூட்டத்தை கண்டுகொள்ளாதது ஏன் என பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது.