ஊர்காவற்துறையில் கடைகளுக்கு தண்டப்பணம் - கடைகள் சீல் வைப்பு
யாழ். ஊர்காவற்துறையில் இரு கடைகளில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த, திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு பொருத்தமற்ற பெருமளவான பொருட்கள் காணப்படிருந்த நிலையில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா.சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ.வி.கிசோக்குமார் ஆகியோரடங்கிய குழுவினரால் கடைகள் கடந்த 22.01.2026ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இரு கடைகளில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த, திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு பொருத்தமற்ற பெருமளவான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றில் வழக்குகள் தாக்கல்
இதனையடுத்து இரு கடை உரிமையாளர்களிற்கும் எதிராக தனித்தனியாக 34 குற்றச்சாட்டுக்கள், 13 குற்றச்சாட்டுகளுடன் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் இரு கடை உரிமையாளர்களையும் குற்றவாளிகளாக இனங்கண்டு முறையே 170000 ரூபா மற்றும் 65000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளார்.
அத்துடன் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இரு கடைகளையும் சீல் வைத்து மூடுமாறு கட்டளை இட்டார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் இரு கடைகளும் சீல் வைத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |