அல்பா கட்சிக்கு நிதி நெருக்கடி: ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகல்
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாதத்திற்கு ஆதரவான அல்பா கட்சி போட்டியிடுவது சந்தேகம் என தலைவர் கென்னி மெக்அஸ்கில் தெரிவித்துள்ளார்.
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உட்கட்சி பூசல்கள் காரணமாக எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஸ்கொட்லாந்து ஜனாதிபதி அலெக்ஸ் சால்மண்ட் என்பவரால் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த கட்சி, தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்வதற்கான தகுதியை இழக்கும் நிலையில் உள்ளது.
நிதி நெருக்கடி
நிதிச் சிக்கல்கள், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கிறிஸ் மெக்லெனி நீக்கப்பட்ட விவகாரம் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்த பொலிஸார் விசாரணை ஆகிய காரணங்களால் கட்சி மேலும் பலவீனமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தற்போதைய நிதி நிலைமையைக் கொண்டு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் தேர்தல் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்றும் மெக்அஸ்கில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அலெக்ஸ் சால்மண்டின் மறைவிற்குப் பிறகு அல்பா கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவரது உறவினரும் வேட்பாளருமான கிறிஸ்டினா ஹென்றி போன்ற சிலர், கட்சியின் மரபைக் கைவிடக்கூடாது என்று தலைமையின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.