பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மனு தாக்கல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றும் முயற்சியில் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கர்தினால் மல்கம் ரஞ்சித் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல விதிகள் அரசியல் சாசனத்துடன் ஒத்துப்போவதில்லை என்று கூறி உத்தரவை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தை கர்தினால் தனது மனுவில் கோரியுள்ளார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலம் தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால், நியாயமான சந்தேகம் இன்றி தேவையற்ற கைதுகளை மேற்கொள்ள முப்படை, காவல்துறை மற்றும் கடலோரப் பொலிஸாருக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படும்.
இது அரசியல் சாசனம் அளித்துள்ள கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என கர்தினால், தனது மனுவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, ஜனவரி 10ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யோசனையை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற வாக்கெடுப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்புக்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கர்தினால் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு யோசனை
முன்னதாக, கடந்த வாரம், நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக, சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என கூறி உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
ஏற்கனவே 2023 செப்டம்பர் 05, அன்று, அரச வர்த்தமானியில் பல்வேறு தரப்பினரால் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துகளுக்கு இணங்க திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை வெளியிடவும், யோசனையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் உள்ளிட்ட உரிமை அமைப்புகள் உத்தேச
சட்டத்தை திருத்தியமைத்து சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குமாறு இலங்கை
அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
