மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்த்து மனுதாக்கல்
மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், தாம் சபையின் தவிசாளர் பதவியிலிருந்தும், பிரதேச சபை உறுப்பினர் நிலையிலிருந்தும், வடக்கு மாகாண ஆளுநரால் நீக்கப்பட்டமையை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரரான, சாஹுல் ஹமீத் முகமது முஜாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரதேச சபைத் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தமது மனுவில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகவும் உறுப்பினராகவும், தம்மை மீண்டும், நியமிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுநருக்கு உத்தரவிடுமாறு, தமது மனுவில் கோரியுள்ளார்.
2021, செப்டம்பர் 13, திகதியிட்ட ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பில், வடக்கு மாகாண ஆளுநர், மன்னார் பிரதேச சபையின் தலைவராக இருந்த சாஹுல் ஹமீத் முகமது முஜாஹீரை பதவி நீக்கம் செய்தார்.
அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட தகுதியற்ற தன்மைக்கு போதுமான ஆதாரம் இருப்பதாகக் கூறியே இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் அறிவித்திருந்தார்.
எனினும் தம்மை, தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிய செயல்பாடு, இயற்கை நீதியின் கொள்கையை மீறி எடுக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மன்னார் பிரதேச சபையின் தலைவரானமை, இதுவே முதல் முறை என்பதால், தாம் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.