சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற குறித்த போராட்டம் தொடர்பில் தெரியவருகையில்,
காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில், சுயநினைவற்று கிடந்த இளைஞனை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்தபோதே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் கீரிமலை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ம. ஜெனுசன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த இளைஞன் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இளைஞன் ஒரு மரண சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை, அங்கு சிலர் அவருடன் முரண்பட்டதாகவும் அவர்களே இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆகவே, கொலை சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து, கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி இளைஞனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.