கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்
தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், "கடந்த வாரம் டொலரின் மதிப்பு சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக அசாதாரணமாக உயர்ந்தது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு டொலர்களை வழங்கிய போதிலும், தற்போது மீண்டும் டொலரின் மதிப்பு அதிகரித்து இன்று 339.50 ரூபாவை எட்டியுள்ளது.
சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர்
695 மில்லியன் டொலர்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 695 மில்லியன் டொலர் போன்ற பெருந்தொகை கிடைத்த போதிலும் ரூபாவை வலுப்படுத்த அரசால் முடியவில்லை. அரசின் மீதான சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதால், வெளிநாட்டு ஊழியர்களும் ஏற்றுமதியாளர்களும் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில் தாமதம் காட்டுகின்றனர்.

அத்துடன் டொலரின் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள் டொலர்களைத் தம் வசம் வைத்துள்ளனர். மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நெருங்கிய நண்பர்களுக்குச் சாதகமாக 1,700 வாகனங்களை இறக்குமதி செய்ய 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் உறுதிப்பத்திரங்கள் அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளன.
மே 16 ஆம் திகதி வர்த்தமானி வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பே, அதாவது மே 15 ஆம் திகதியே இந்தக் கடன் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கு அனுமதி பெற்ற அதே தரப்பினருக்கே இந்த வாகன இறக்குமதி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் இலாபங்களை ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களே அனுபவிக்கின்றனர்" என்று குற்றம் சுமத்தினார்.
காத்தான்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்ற முயற்சித்தால் எழுந்த சர்ச்சை