தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!
"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கின்றோம்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்துள்ளார்.
'10 - 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசு செயற்படுத்த வேண்டும்' என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, சபையில் இன்று (22) உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பான நிலைப்பாட்டை ஆவணப்படுத்துகின்றேன். அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தை வரவேற்கின்றோம்.
இந்த விடயத்தில் அரசியல்
வேறுபாடு இன்றி எமது ஆதரவு உண்டு.
மேலதிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அண்மையில் சமூக ஊடகப்
பதிவுகளுக்காக இந்தச் சட்டத்தில் கைது செய்தவர்களையும் விடுவிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.