தமிழர் பகுதியில் தந்தை செல்வாவின் 128 வது ஜனனதினம் அனுஷ்டிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று(31.03.2026) இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
ஜனன தினம் அனுஷ்டிப்பு
அத்துடன், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஞானமுத்து ஸ்ரீநேசன்,இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விரிவுரையாளர், நடராசா புஸ்பராசா, தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம்
தந்தை செல்வாவின் 128 வது ஜனனதினம் இன்று(31) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நீண்ட நாட்களாக பணியாற்றினார்.

இவரது சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு இன்று வரையும் பல தமிழ் கட்சிகளின் கொள்கைகளாக இருந்து வருகின்றன.
இன்று யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தமிழர் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மாணவர் சபை முதல்வர், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் மாலை அணிந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது தந்தை செல்வநாயகம் தொடர்பாக தமிழரசு கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் கருத்துக்களை பகிர்ந்தார்.

மேலதிக தகவல் - தீபன்
மன்னார்
தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128வது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31)மன்னாரில் நினைவு கூறப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை 10.15 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1898 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் பிறந்த அவர் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான தலைவராகக் கருதப் படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - ஆஷிக்
திருகோணமலை
இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று (31)மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க. செல்வராசா (சுப்ரா), உப்பு வெளி பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ், தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி. விஜய குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலதிக தகவல் - ரொஷான்