அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் பிணையில் விடுதலை
ஜனாதிபதி செயலகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்து சேதங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சரணடைந்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸை 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான அருட்தந்தை வெளிநாடு செல்ல தடைவிதித்த நீதிமன்றம், பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவில் நாளைய தினம் முன்னிலையாகி, வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பிணை நிபந்தனையும் விதித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்திய சம்பவம்
சட்டவிரோதமாக ஒன்றுக்கூடி ஜனாதிபதி செயலகத்திற்குள் கடந்த ஜூலை 9 ஆம் திகதி பிரவேசித்து சேதங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதற்கு அமைய சட்டத்தரணி மூலமாக நீதிமன்றத்தில் சரணடைந்த அருட்தந்தை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு நீதிமன்றம் சந்தேக நபரை பிணையில் விடுவித்துள்ளது.
சந்தேக நபரான அருட்தந்தை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.