மேல் மாகாணத்தில் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு!
மேல் மாகாணத்தில் உள்ள கோவிட் தொற்றாலர்களிடம் இருந்து பெறப்பட்ட 30 வீத மாதிரிகளில் இருந்து டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “டெல்டா மாறுபாடு மற்ற வகைகளை விட வேகமாக பரவுகிறது என்பது தெளிவாகிறது, இந்த மாறுபாடு பரவாமல் தடுப்பது முக்கியம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, டெல்டா மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மட்டும் பயனுள்ளதாக இருக்காது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் வைத்தியர் சந்திக எபிடகடுவ எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோவிட் -19 மற்றும் டெங்கு ஆகியவை நாடு முழுவதும் ஒரே வேகத்தில் பரவுகின்றன என்று டி சோய்சா மகப்பேறு மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் பிரியங்கரா ஜெயவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில், கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தாமதமின்றி பெறுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.