இந்திய தூதரகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டம்: கடற்றொழில் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
இந்திய அத்துமீறிய கடற்றொழிலை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் கடற்றொழில் சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் இன்று(15.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துமீறிய கடற்றொழில்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களின் வருகை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் தொழிலையும் தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அண்மையில் இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மனு கையளித்தோம் பயன் ஏதும் ஏற்படவில்லை.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில்
உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னாள் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
எமது போராட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களைச் சார்ந்த சங்கங்கள் சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |